Monday, July 31, 2006

திசைகள் ஆகஸ்டு இதழ்: சில விளக்கங்கள் சில கேள்விகள்

தனிமனித உரிமைகள் எல்லோருக்கும் அவசியமா?

இந்த திசைகள் இதழில், தனி மனித உரிமைகள், சுதந்திரம் பற்றி எல்லோரும் பேசியிருந்தாலும், இதற்குள் பதுங்கிக்கிடக்கிற இதன் கோர உருவத்தைப் பற்றியும் யாராவது கொஞ்சம் சொல்லியிருக்கலாம். இப்பொழுது இருக்கிற சூழ் நிலையில் எந்த ஒரு ஆரோக்கியமான, அல்லது முன்னேற்றத்துக்கு எதிரான கருத்துக்கள் வந்தாலும், அதை ஆதரிக்க அல்லது எதிர்க்க குழுக்கள்/அமைப்புகள் இருக்கின்றன. இது எந்த ஒரு கருத்துக்கும் பொதுவானது. கருத்தைப் பொறுத்து, ஆதரவளிக்கிற அல்லது எதிர்க்கிறவர்களின் எண்ணிக்கை வித்தியாசப்படுகிறதே தவிர இந்த இருபட்ட நிலைமையின் இருப்பு உண்மையானது. உரிமைகள் என்ற பேரில், எதிரணி போராட்டம் நடத்துவதும், உண்ணாவிரதம் இருப்பதும் இப்பொழுது மிகமிக சாதாரணமாகிவிட்ட ஒன்று. ஒரு நடிகை சொன்ன கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் அளவிற்கு (ஒரு நாளைக்கு 24 மணி நேரத்துக்கும் அதிகமாக) எக்கச்சக்க நேரம் படைத்த ஒரே சமூகம், நம் தமிழ் சமூகம் தான் (சந்தோசப்படுவோமாக! தலை நிமிர்ந்து நிற்போமாக!!). இதனால், எல்லா முன்னேற்ற பணிகளும் தடைபடுகின்றன. அல்லது தாமதப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், ஒரு அமைப்பின் தலைமையில் இருந்துகொண்டு, புகழுக்காகவும், பத்திரிக்கைகளில் பெயர் வரவேண்டும் என்பதற்காகவும் பொறுப்பில்லாத
கருத்துக்களை வெளியிடுவதும், போராட்டங்களை திட்டமிடுவதுமாகவும் இருக்கிற மனிதர்களுக்கு, இந்த (எழுத்து மற்றும் பேச்சு) சுதந்திரம் வழங்கப்படுவது அவசியமானது தானா? இவர்களின் இந்த உரிமைகள், ஒரு மன நோயாளியின் கையில் இருக்கிற கூர்ந்த ஆயுதங்களாக அல்லவா தெரிகின்றன! அப்படியென்றால், இவர்களின் உரிமைகளைப் பிடுங்குவதில் தப்பென்ன? இந்த தனி நபர் உரிமைகளை அனுபவிக்க, குறைந்த பட்ச தகுதிகள் என்று எதையாவது அறிமுகப்படுத்தலாமா?



மதங்களை வம்புக்கிழுக்க வேண்டாமே!!


(இது தங்கமணியின் பதிவிற்காக எழுதப்பட்டது.)

கீழை மற்றும் மேலை உலகத்து மனிதர்களின் (தனிமனித) விடுதலை பற்றிய அறியாமைக்கு அல்லது விழிப்புணர்வுக்கு, மதங்களைக் காரணம் காட்டுவதை விட இரு இடங்களிலும் உள்ள சமூக கட்டமைப்பின் அடிப்படையில் இந்த விஷயத்தை அனுகுவதே மிகச்சரி. மேலை நாடுகளில் 16 அல்லது 18 வயதில் கிடைக்கிற சுதந்திரம் (பெற்றோர்களிடமிருந்தான விடுதலை) அவர்களின், பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் பற்றிய அறிவைக் கொடுக்க போதுமானதாயிருக்கிறது. அவரவர்களின் உணவை அவர்களே தேட வேண்டியிருக்கிறது. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கான கட்டாய சமூக அல்லது இராணுவ சேவை அங்குள்ள இளைஞர்களைப் பொறுப்புள்ளவர்கள் ஆக்குகின்றன என்றால் அது மிகையாகாது. அதோடு, மேலை நாட்டு முறையின் குழந்தை வளர்ப்பு முறையும், இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, குழந்தைகளின் மீதான வன்முறை சட்டத்தால் மிகக்கடுமையாக கண்டிக்கப்படுகிறது. மேலும் தண்டிக்கப்படுகிறது. இந்திய சமூகத்தில் நிலைமை இப்படியில்லை. எத்தனை வயதான போதும், மகன் அல்லது மகளை காப்பாற்றும் கடமை இன்னும் பேற்றோர் மீதே படிந்து கிடக்கிறது. அது மட்டுமல்லாமல், பெற்றோரிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு அளவேயில்லை. சிறுவயதில் ஆழப்படிந்து விடுகிற இந்த வன்முறை மீண்டும் நமது பிள்ளைகளின் மீது வேர்பிடித்து வளர்கிறது. வன்முறைக்கு ஆழாக்கப்பட்டவர்களும், அதை தலைமுறை தலைமுறையாய் நடத்திக்கொண்டிருப்பவர்களும் இருக்கும் சமுதாயத்தில், தனி நபர் விடுதலை, உரிமைகள் பற்றிய எண்ணம் எப்படி வரும்? அதனால், நமது சமூக கட்டமைப்பை சீர்திருத்தம் செய்தாலே போதுமானது. நமது சமுதாயம் பொறுப்புள்ள, நாட்டின் அக்கறையில் விருப்பம் உள்ள ஒன்றாக மாறிவிடும். மதங்களால் சமூகம் பாதிக்கப்படுவது என்பது என்னால் நம்பமுடியாத விசயம். பெற்றோர்களைத் தாண்டி, ஆசிரியர்களைத் தாண்டி, மனைவிகளைத் தாண்டி மற்றும் குழந்தைகளைத் தாண்டித் தான் மதம், ஒரு மனிதனை சந்திக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலானோர் வாழ்க்கையில் அது கடைசி வாசலுக்கு வெளியே நின்று மெலிந்த சத்தத்துடன் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரன் போலத்தான் இருக்கிறது. பாவம் மதங்கள்! அவைகளை வம்புக்கிழுக்க வேண்டாமே!!

4 Comments:

Anonymous Anonymous said...

அன்புள்ள புதுமை விரும்பி அவர்களே! உங்கள் கருத்தினை என் "blog"ல் உடனடியாக சேர்க்க முடியாமைக்கு வருந்துகிறேன்! உங்கள் கருத்தினை சேர்க்கும்போது, "Password Dialog Box" திறக்கிறது. காரணம் உங்கள் ஃபோட்டோ. நீங்கள் இதை சரி தெய்த உடன் நான் உங்கள் பின்னூட்டத்தைக் கட்டாயமாக ஏற்றி பதில் கூறுகிறேன். உங்கள் "Profile"க்கு வந்தாலும் அதே "Password Dialog Box" திறக்கிறது.

8:39 AM  
Blogger புதுமை விரும்பி said...

மதுரா அவர்களே, வலைப்பூவில் இருந்த பிழையினைச் சரிசெய்துவிட்டேன். உங்கள் தகவலுக்கு நன்றி.

1:50 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

மேலை நாடுகளின் சுதந்திரப்பாங்கிற்குக் காரணம் அவை மதங்களிலிருந்து போன நூற்றாண்டிலேயே விடுதலை பெற்று விட்டதுதான். மதங்களின் ஆதிக்கத்திலிருந்து வெளிவராத நாடுகளிலேயே தனி மனித சுதந்திரம் சீரழிகிறது.

8:03 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ம்யூஸ் அவர்களே!

2:09 AM  

Post a Comment

<< Home

Free Hit Counter
Google PageRank

Your Ad Here